நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! – போலீஸ் எச்சரிக்கை

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்த அழைப்பில் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப் போவதாகக் கூறி அழைப்பைத் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விஜய் வீட்டுக்கு போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியோடு சோதனை நடத்தப்பட்டது. வெறும் மிரட்டலாக இருக்கும் என்று தெரிந்தாலும் உறுதி செய்வதற்காக பரிசோதனை செய்யப்பட்டது. கடைசியில் வீட்டில் வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர்.

அந்த எண் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பவருடையது என்று தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் சற்று மனவளர்ச்சி குன்றிய நபர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த நபரின் குடும்பத்தினரை எச்சரித்து அவரை அனுப்பிவைத்தனர். மீண்டும் இது போன்று நடக்காத வகையில் பார்த்துக்கொள்ளும்படி அறிவுரை கூறியுள்ளனர். அதே நேரத்தில் விஜய்யின் சென்னை நீலாங்கரை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.