நியூகேஸில், அக்டோபர் 8, 2020: நியூகேஸில் பல்கலைக் கழக மாணவர்களில் மேலும் 1600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் இரண்டாம் கட்ட கொரோனா பரவலுக்கு இளைஞர்கள் முக்கிய காரணமாக இருப்பார்கள் என்று நிபுணர்கள் எசரித்தனர்.
அதை உறுதி செய்யும் வகையில் பல்கலைக் கழக மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு அதிக அளவில் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
நியூகேசிலில் உள்ள இரண்டு பல்கலைக் கழகங்களின் 1003 மாணவர்கள் மற்றும் 12 ஊழியர்களுக்கு கடந்த வாரம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது மேலும் 1600 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
நார்த்ம்ப்ரியா பல்கலைக்கத்தில் 619 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த வாரம் அங்கு 770 பேருக்கு தொற்று உறுதியானது. டர்ஹாமில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளும், சுந்தர்லேண்டில் 102 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் கொரோனா வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து அங்கு ஆன்லைன் வகுப்பு முறைக்கு பல்கலைக் கழகம் மாறியுள்ளது.
தற்போது கண்டறியப்பட்ட தொற்றுக்களில் பெரும்பாலானவை சமூகத்தில் இருந்து வந்தவை என்றும் பல்கலைக் கழக வளாகத்தில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில் நாட்டிங்காம் பல்கலைக் கழகம் மற்றும் ஷெஃபீல்ட் பல்கலைக் கழகத்தில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை, உணவு வவுச்சர்கள், சலவை உதவி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…