மூன்று வயது குழந்தை உள்பட குடும்பத்தோடு தற்கொலை… லண்டனில் சோகம்!

(Image: BBC/ PA MEDIA)

லண்டன், அக்டோபர் 6, 2020: மேற்கு லண்டனில் உள்ள ப்ரெண்ட்ஃபோர்டில் மூன்று வயது குழந்தையை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் உள்ள கிளேபாண்ட்ஸ் லேனில் உள்ள வீட்டுக்குள் இருந்து கவலை கொள்ளும் வகையில் சப்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கதவை திறக்க கேட்டுக் கொண்டனர். உள்ளே இருந்து பதில் வராத நிலையில், இன்று அதிகாலை 12.50 மணி அளவில் போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.

அங்கு வீட்டில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் மூன்று வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்த நிலையில் கண்டறிந்தனர்.

அதே நேரத்தில் படுகாயத்துடன் 40 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கண்டறிந்தனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் சேவை வரவழைக்கப்பட்டது. லண்டன் ஆம்புலன்ஸ் சர்வீஸ் மருத்துவப் பணியாளர்கள் வந்து பார்த்தபோது அந்த நபர் உயிரிழந்திருப்பது தெரிந்தது.

மூன்று பேரின் உடலும் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. முடிவு இன்னும் வெளியாகவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். இவர்கள் மரணம் பற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த வீட்டை தடயவியல் துப்பறியும் நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் தேடவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கு பகுதி பிசியு கமாண்டர் பீட் கார்ட்னர் கூறுகையில், “எதனால் இந்த சம்பவம் நடந்தது என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வு நடந்து வருகிறது.

இந்த சம்பவம் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் அவர்கள் போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இந்த கொடூர சம்பவம் உள்ளூர் வாசிகளிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

குழந்தையையும் தாயை கொன்றுவிட்டு அந்த நபர் தற்கொலை செய்தாரா, எதனால் இந்த சம்பவம் நிகழ்ந்தது என எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் மூன்று வயது குழந்தை படுகொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter