பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஆடம் மார்டின் மனைவியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டே பாப்கார்ன் சாப்பிட்டுள்ளார். அப்போது பாப்கார்ன் துண்டு ஒன்று பல்லில் சிக்கியுள்ளது. டூத் பிக், ஆணி, பேனா மூடி, ஒயர் என பல பொருட்களைக் கொண்டு அந்த பாப்கார்ன் துண்டை எடுக்க முயற்சித்துள்ளார். அதன்பின் மூன்று நாட்கள் கழித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். பிரச்னை முடிந்தது என்று நினைத்த அவருக்கு அதன்பின் தான் அதிர்ச்சி காத்திருந்தது.
பல பொருட்கள் கொண்டு ஈரை குத்தி ஒருவழி செய்ததன் காரணமாக அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பல் வலி மட்டுமே இருந்துள்ளது. அது படிப்படியாக உயர்ந்து இரவில் வியர்த்து கொட்டுவது, மயக்கமாக இருப்பது, தலைவலி போன்ற பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. வீட்டின் அருகே மருத்துவரை சென்று பார்த்துள்ளார். ஆனாலும் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக கால் வீங்கியதோடு, தோலிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற அவரை தீவிரமாக மருத்துவர்கள் சோதித்தனர்.
அதன்பின் தான் இதயத்தை பாதிக்கும் எண்டோகார்டிஸ் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்காரணமாக இதயத்தில் உள்ள குழாய்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனே இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதோடு காலிலும் ரத்த ஓட்டம் சீராக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவ்வளவு பிரச்னைகளுக்கும் அவர் சாப்பிட்ட பாப்கார்ன் தான் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். பல்லில் சிக்கிய பாப்கார்னை பல பொருட்கள் கொண்டு மூன்று நாட்கள் குத்தியதால் அவருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரரான இவருக்கு தீயணைப்பு வீரர்களுக்கான தொண்டு நிறுவனம் மூலம் உதவிகள் கிடைத்துள்ளது.
பல மாத போராட்டத்திற்குப் பிறகு தற்போது முழுவதும் குணமடைந்துள்ள மார்டின், இனி தன் வாழ்கை முழுவதும் பாப்கார்ன் சாப்பிட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.