கொரோனாவுக்கு சகோதரரின் உயிரைப் பறிகொடுத்த லிவர்பூல் மேயர்!

படம்: லிவர்பூல் மேயர் ஜோ ஆண்டர்சன்.

லிவர்பூல், அக்டோபர் 17, 2020: லிவர்பூர் மேயர் ஜோ ஆண்டர்சனின் சகோதரர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று உச்சத்தில் உள்ள பகுதியாக லிவர்பூல் உள்ளது. மூன்று நிலை கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்ட போது மூன்றாம் நிலை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட ஒரே பகுதியாக லிவர்பூல் இருந்தது.

கொரோனாவில் வீரியம், பாதிப்பை உணராத மக்கள் ஊரடங்கு தொடங்குதவற்கு முன்பு ஒன்று கூடி லிவர்பூல் நகரத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தினர்.

லிவர்பூலை மிஞ்சும் வகையில் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் நேற்று பொது மக்கள் சாலையில் கூடி கும்மாளமிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் லிவர்பூல் நகர மேயர் ஜோ ஆண்டர்சனின் மூத்த சகோதரர் கொரோனாத் தொற்று காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.45 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக ஜோ ஆண்டர்சன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “லிவர்பூல் ஐசியு மருத்துவப் பணியாளர்களின் தீவிர முயற்சிக்குப் பிறகும் என்னுடைய சகோதரர் நேற்று இரவு 10.45 மணி அளவில் உயிரிழந்தார். அவரது உயிரைக் காப்பாற்றப் போராடிய அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இந்த நேரத்தில் ஆதரவு அளித்து நோயில் இருந்து மீண்டு வர வாழ்த்து தெரிவித்த அனைவர்க்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் ஆதரவளித்து இந்த போரில் வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.

லிவர்பூல் நகரில் செவ்வாய்கிழமை 3204 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டனர். போன வாரத்தில் மொத்தமாகவே 3191 என்ற அளவில் தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாத் தொற்றால் லிவர்பூல் திணறிக் கொண்டிருக்க, மூன்றாம் நிலை கட்டுப்பாட்டை ஏற்பதா வேண்டாமா என்று கிரேட்டர் மான்செஸ்டர் குழம்பிக் கொண்டிருக்கிறது.

பிரதமர், மேயர் மற்றும் அரசியல்வாதிகள் பிடிவாதத்தால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter