கொரோனா தடுப்பூசி 90 சதவிகிதம் அளவுக்கு மக்களுக்கு பலன் அளிப்பதாக இருக்கும் என்று மருந்து தயாரிப்பாளர்களான Pfizer and BioNTech அறிவித்துள்ளன.
கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் இங்கிலாந்தில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் உள்ளது.
இந்த நிலையில் தடுப்பூசியை தயாரித்து வரும் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் (Pfizer and BioNTech) தடுப்பூசி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
அறிவியல் மற்றும் மனித குலத்துக்கு மிகவும் முக்கியமான நாள் என்று இதைப் பற்றி அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆறு நாடுகளைச் சேர்ந்த 43,500 பேருக்கு இந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு எந்த ஒரு மருத்துவப் பிரச்னையும் எழவில்லை.
இதைத் தொடர்ந்து இந்த மாத இறுதிக்குள் மருந்தை பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுப்புவது தொடர்பான ஒப்புதலைப் பெற விண்ணப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ இந்த தடுப்பூசி உதவும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி நம்முடைய உடலில் செலுத்தப்பட்டதும் கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிரான ஆன்டிபாடியை உருவாக்குவதுடன், கிருமியை அழிக்கும் டி-செற்களைத் தயார் செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்று வார இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசி பொது மக்களுக்கு செலுத்திப் பரிசோதிக்கப்பட்டது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா, தென் ஆப்ரிக்கா, துருக்கி நாட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு அவர்கள் உடலில் 90 சதவிகிதம் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது தெரிந்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை தயார் செய்ய இந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1.3 பில்லியன் டோஸ்களை வழங்க முடியும் என்று ஃபைசர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…