லண்டன்: மூன்று வயது மகன், மனைவியைக் கொலை செய்த கொடூர தமிழர்!

கொலை செய்யப்பட்ட பூர்ணா காமேஷ்வரி மற்றும் குழந்தை கைலாஷ் (Image: Met Police)

லண்டன், அக்டோபர் 7, 2020: லண்டனில் மூன்று வயது மகன் மற்றும் மனைவியைக் கொலை செய்துவிட்டு சடலத்துடன் மலேசிய தமிழர் ஒருவர் வாழ்ந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் உள்ள கிளேபாண்ட்ஸ் லேனில் உள்ள கோல்டன் மைல் ஹவுசில் நேற்று அதிகாலை போலீசார் அதிரடியாக நுழைந்த போது இரண்டு பேர் இறந்து கிடந்ததையும் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதையும் கண்டறிந்தனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால், அவர் அதற்குள்ளாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் உயிரிழந்த நபர்கள் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

மகன், மனைவி மற்றும் வளர்ப்பு நாயைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் மலேசிய தமிழரான குகராஜ் சிதம்பரநாதன் (42) என்று தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 21ம் தேதிக்குப் பிறகு குகராஜின் மனைவி பூரண காமேஷ்வரியிடமிருந்து மொபைல் போன் அழைப்பு வரவில்லை.

அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை என்ற நிலையில் அவரது உறவினர்கள் போலீசின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த அக்டோபர் 4ம் தேதி இரவில் போலீசுக்கு புகார் வந்துள்ளது. அக்டோபர் 5ம் தேதி பூரண காமேஷ்வரியின் இல்லத்துக்கு பல முறை போலீசார் சென்றனர்.

ஆனால் வீடு பூட்டி இருந்ததால், அருகில் இருந்தவர்களிடம் விசாரித்துவிட்டு, கணவன் குகராஜை தொடர்புகொள்ள முயன்றனர்.

குகராஜ் கதவை திறக்காத நிலையில் பூரண காமேஷ்வரியின் நலனை கருத்தில் கொண்டு 6ம் தேதி அதிகாலை 12.40 மணி அளவில் போலீசார் அதிரடியாக கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தனர்.

அப்போது மூன்று வயது மகன் கைலாஷ், மனைவி பூரண காமேஷ்வரி, வளர்ப்பு நாய் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. மற்றொரு அறையில் குகராஜ் சிதம்பரநாதன் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்துள்ளார்.

போலீசார் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார்கள் என்று தெரிந்ததும் அவர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

தாயும் மகனும் இரண்டு வாரங்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பூரண காமேஷ்வரி, குகநாதன் இருவருக்கும் இடையே திருமணம் ஆனதிலிருந்து சண்டை நடந்து வந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் வீட்டைவிட்டு எங்கும் செல்ல முடியாத நிலையில் இருவருக்குமான பிரச்னை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் குடும்ப சண்டை காரணமாக மகன் மற்றும் மனைவியைக் கொலை செய்துவிட்டு அவர்கள் உடலுடன் இரண்டு வாரங்களுக்கு குகராஜ் வாழ்ந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தமிழர் ஒருவர் தன்னுடைய குடும்பத்தை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்திருப்பது லண்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter