இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதனால் அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனாவின் 2-வது அலை தங்கள் நாட்டில் உருவாகி விடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக உள்ளது.
இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம் (மே) தொடக்கம் முதல் விமானம் மூலம் வரும் தங்கள் நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை அனைத்து விமான நிலையங்களிலும் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்த அது முடிவெடுத்துள்ளது. இந்த நிபந்தனையை மீறி இங்கிலாந்து வர எந்த ஒரு பயணியும் அனுமதிக்கப்படமாட்டார்.
இங்கிலாந்தில் பலி எண்ணிக்கை 21,000 தாண்டியது! ஊரடங்கைத் தளர்த்துவது ஆபத்து – போரிஸ் ஜான்சன்
வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளால்தான், தங்களது நாட்டில் கொரோனா வேகமாக பரவி அதிக உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டதாக இங்கிலாந்து அரசு கருதுகிறது, எனவேதான், இத்திட்டத்தை அமல்படுத்துவதில் அது உறுதியாக இருக்கிறது.
ஏற்கனவே ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கிரீஸ் போன்ற நாடுகளில் இதுபோன்ற திட்டம் அமலில் உள்ளதால்,இங்கிலாந்தும் இதனை கடுமையாக பின்பற்ற உள்ளது.
இதுகுறித்து வெளிநாடுகளில் வாழும் இங்கிலாந்துவாசிகள் மற்றும் உலக சுற்றுலா பயணிகள் அனைவரிடமும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.