இங்கிலாந்தில் 650 இடங்களைக் கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. இதில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், கன்சர்வேடிவ் கட்சி 364 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதில் தொழிலாளர் கட்சிக்கு 203 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையுடன் கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதற்கிடையே தேர்தலில் தனது கட்சியை அமோக வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சான் ஜனவரி 31-ந்தேதிக்குள் “பிரெக்ஸிட்”டை நிறைவேற்றுவேன் என சூளுரைத்துள்ளார்.
தொடர்ந்து, தன்னை வெற்றிப் பெறச் செய்த இங்கிலாந்து வாழ் தமிழ் சமூக மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பிரத்யேக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.
அதில், இலங்கையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களுக்கு இலங்கை அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் இனி இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் மக்களை இலங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என வாழ்த்துவதாகவும் தெரிவித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் இந்த மீடியா சந்திப்பில் பேச் ஆரம்பிக்கும் போது வணக்கம் என தமிழில் கூறியும்..முடிக்கும் போது நன்றி என தமிழில் கூறியும் முடித்தது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவர் மதிக்கும் விதத்தை காட்டியுள்ளதாக தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளது.