கொரோனா பாதிப்பு நபர்களை கண்டறிய மோப்ப நாய்களுக்கு பயிற்சி – இங்கிலாந்து புதிய முயற்சி

தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து நாட்டில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 464 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 5 ஆயிரத்து 386 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 768 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது.

20,000 கொரோனா இறப்புகளை நெருங்கும் இங்கிலாந்து – ஒரே நாளில் 768 பேர் பலி

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களை மோப்ப நாய்கள் மூலம் உடனடியாக கண்டுபிடிக்க பயிற்சி அளிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மோப்ப நாய்கள் மூலம் மலேரியா தாக்கியவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதில் வெற்றி கண்ட இங்கிலாந்தின் ‘மெடிக்கல் டிடெக்சன் டாக்ஸ் சாரிட்டி‘ என்ற தொண்டு நிறுவனம் இதற்கு முன்வந்துள்ளது.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் கிளாரியா கூறியதாவது:

கொரோனா நோய் பாதித்தவர்களை சில வினாடிகளில் மோப்ப நாய்கள் கண்டுபிடித்துவிடும் வகையில் தகுந்த பயிற்சி அளிக்க முடியும். 6 முதல் 8 வார பயிற்சி இதற்கு போதுமானது.

‘லேப்ரடார் ரெட்ரீவர்‘ இன நாய்களின் 3 வகைகளை இதற்கென பிரத்யேகமாக பயன்படுத்தலாம்.

இந்த நாய்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்களையும், இல்லாதவர்களையும் உடனடியாக தனது மோப்ப சக்தியால் அடையாளம் கண்டுவிடும்.

இப்படி பாதிக்கப்பட்டவர்களை விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு கொண்டு போய்விடலாம். இந்த மோப்ப நாய்களை இங்கிலாந்தில் உள்ள அத்தனை விமான நிலையங்களிலும் பயன்படுத்தி கொரோனா நோயாளிகளே நாட்டுக்குள் நுழைய முடியாதவாறு செய்துவிடலாம்.

லேப்ரடார் இனத்தின் 3 ரக நாய்களுக்கும் பயிற்சி அளிக்க 5 லட்சம் பவுண்டுகள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.8கோடி) செலவு பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.