புதிய மூன்றடுக்கு கட்டுப்பாடு அமலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காவிட்டால் வரும் நாட்களில் மருத்துவமனைகள் மிகப் பெரிய அளவில் கொரோனா நோயாளிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமைச்சர் மைக்கேல் கோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த மாதம் வரை மூன்று நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் முழு ஊரடங்கு கொண்டுவரப்பட்டது.
முழு ஊரடங்குக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆளும் கட்சி எம்.பி-க்களும் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டிசம்பர் 2ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து மீண்டும் மூன்று அடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடு கொண்டு வருவது அரசு முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு விலகினாலும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக சுதந்திரமாக இயங்க முடியாத நிலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சரவை அலுவலக அமைச்சர் மைக்கேல் கோவ் டைம்ஸ் இதழிலில் தற்போதைய சூழல்கள் பற்றிக் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், புதிய கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதில், “தற்போது மூன்றடுக்கு ஊரடங்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இல்லை என்றால் இதனால் ஏற்படும் கடுமையான விளைவுகளுக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
முழு ஊரடங்குக்கு முன்பு நாங்கள் அமல் படுத்தியிருந்த மூன்று நிலை கட்டுப்பாடு போதுமான அளவுக்கு பலன் அளிக்கவில்லை. அதன் காரணமாக சமூக ஒன்று கலப்பை குறைக்க முடியவில்லை.
கொரோனா உச்சத்தில் இருந்த ஏப்ரலில் நாடு முழுவதும் 20 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
செப்டம்பர் 11ம் தேதி இது வெறும் 740 ஆக இருந்தது. தற்போது 16 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு இத்தகைய தேசிய நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் அனைவரும் கடினமான முடிவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
புதிய கட்டுப்பாடுகளுக்கு ஆளும் கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி இதுவரை தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…