திருந்தாவிட்டால் ஊரடங்கு நிச்சயம்… லீட்ஸ் மக்களுக்கு கடைசி எச்சரிக்கை!

Leeds, Covid19
லீட்ஸ் நகரம் - கோப்பு படம் (Image: bbc.com)

லீட்ஸ், 4 செப்டம்பர் 2020: இங்கிலாந்தின் லீட்ஸில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதால் “கவலைக்குரிய பகுதி” என்று அதிகாரப்பூர்வ கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இனியும் திருந்தாவிட்டால் ஊரடங்கைத் தவிர்க்க வழியே இல்லை என்று உள்ளூர் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லீட்ஸில் சமீப நாட்களாக கொரோனாத் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு லட்சம் மக்கள் தொகையில் 32.4 பேருக்கு தொற்று பரவும் விகிதம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு இளைஞர்கள் மீது பலரும் குற்றம்சாட்டுகின்றனர். சட்டவிரோத ஒன்று கூடல், இசை நிகழ்ச்சி, பார்ட்டி என்று பொழுதை போக்கிவிட்டு கொரோனாவை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்து உள்ளது.

இனியும் லீட்ஸ் மக்கள் திருந்தவில்லை என்றால், கொரோனா பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் விளைவுகளைத் தவிர்க்க முடியாது என்று நகர சபை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

லீட்ஸ் பகுதியில் தற்போது கொரோனா தொற்று கண்டறியப்படுபவர்களில் பெரும்பான்மையினர் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

வீட்டு பார்டி போன்ற நிகழ்வுகள் கொரோனா பரவலை அதிகரிக்கச் செய்துவிட்டது என் கூறப்படுகிறது.

இது குறித்து உள்ளூர் கவுன்சிலரும் கன்சர்வேடிவ் குழு தலைவருமான ஆண்ட்ரூ கார்டர் கூறுகையில், “நகரத்தின் பல பகுதிகளில் சோதனைகள் நடைபெறவில்லை.

இதுவே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. சோதனைத் திறனுக்கும் குறைவான அளவிலேயே சோதனைகள் செய்யப்படுகின்றன. இதுவே வைரஸ் தொற்று பரவல் மைஸ் 2 முதல் பிளஸ் 1 வரை என்று இருந்ததை மைனஸ் 1 முதல் பிளஸ் இரண்டு என்ற அளவுக்கு உயர்த்திவிட்டது” என்றார்.

லீட்ஸ் நகர சபைத் தலைவர் ஜூடித் பிளேக் கூறுகையில், “லீட்ஸில் முழு ஊரடங்கு வருவதை யாரும் விரும்பவில்லை. எனவே, கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொற்று அதிகரிப்பது தொடர்ந்தால் ஊரடங்கைக் கடுமையாக்குவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

வெள்ளிக்கிழமை வந்துவிட்டது… இளைஞர்கள் வார இறுதிநாட்களில் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டிலேயே இருந்தால் பிரச்னை இல்லை.சுதந்திரம், கொரோனா எல்லாம் பொய் என்று கூறிக் கொண்டு பொழுதுபோக்க வெளியே சென்றால் ஏற்படும் விளைவுகளை ஒட்டுமொத்த லீட்சும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது நிதர்சனம்… இது லீட்சுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே ஒரு எச்சரிக்கைதான்!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter