கிளாஸ்கோ உள்ளிட்ட 11 கவுன்சில் பகுதிகளில் 4ம் நிலை ஊரடங்கு

lockdown, imposed, council, கொரோனா, ஊரடங்கு
(Image: PA Media)

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ உள்ளிட்ட 11 கவுன்சில் பகுதிகளில் வருகிற வெள்ளிக்கிழமை முதல் நான்காம் நிலை ஊரடங்கு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் கொரோனா தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து அங்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் கிழக்கு டன்பர்டன்ஷைர், கிழக்கு ரென்ஃப்ரூஷஷர், கிளாஸ்கோ, ரென்ஃப்ரூஷஷர் மற்றும் டன்பார்டன்ஷைர் உள்ளிட்ட 11 கவுன்சில் பகுதிகளில் கொரோனா நான்காம் நிலை ஊரடங்கு வருகிற வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர வடக்கு மற்றும் தெற்கு லானர்ஷையர், கிழக்கு மற்றும் தெற்கு அயர்ஷயர், ஷ்டிர்லிங், மேற்கு லோதியான் ஆகியவை மூன்றாம் நிலையிலிருந்து நான்காம் நிலை தடுப்புக்கு உயர்த்தப்படுகின்றன.

இந்த 11 கவுன்சில்களில் 4ம் நிலை ஊரடங்கு வருகிற டிசம்பர் 11ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கிழக்கு லோதியான் மற்றும் மிட் லோதியான் ஆகியவை நிலை 3ல் இருந்து நிலை 2க்கு செல்வதாகவும், அதுவும் வருகிற வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்றும் ஸ்காட்லாந்தின் முதல்வர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.

11 கவுன்சில்களில் 4ம் நிலை ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதன் மூலம் அங்கு அத்தியாவசியமற்ற கடைகள், பப்கள், ரெஸ்டாரண்ட்கள், ஜிம்கள் மூடப்படும்.

இதைப் படிச்சீங்களா: கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவது பற்றி மெட் ஹென்காக் என்ன சொன்னார் தெரியுமா?

மூன்று மற்றும் நான்காம் நிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதியைச் சார்ந்தவர்கள் தங்கள் பகுதியை விட்டு வேறு பகுதிக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம். அவசியத் தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் நிக்கோலா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே போல் ஸ்காட்லாந்தின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் நிலை 3 மற்றும் 4 கட்டுப்பாடுகள் உள்ள பகுதிக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நான்காம் நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விவரம்:

மற்றவர்கள் இல்லங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் வெளிப்புற பகுதிகளில் வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கத் தடை இல்லை. ஆறு பேருக்கு மிகாமல் சந்திப்பு இருக்க வேண்டும்.

முடிந்த வரை மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

வொர்க் ஃபிரம் ஹோம் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறையினர் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.

மிக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகின்றன.

மிக நெருங்கி சேவை புரியும் சலூன், பியூட்டி பார்லர், பொழுதுபோக்கு, உட்புற ஜிம்கள் மூடப்படுகின்றன.

ஹாஸ்பெட்டாலிட்டி துறையில் டேக் அவே முறையைத் தவிர்த்து மற்ற சேவைகள் தடை செய்யப்படுகின்றன.

பள்ளிகள் தொடர்ந்து செயல்படலாம்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter