லண்டன், எசெக்ஸ், யார்க் 2ம் நிலை கட்டுப்பாட்டுக்கு செல்கின்றன!

Matt Hancock, கொரோனா
மெட் ஹென்காக்

லண்டன், அக்டோபர் 15, 2020: கொரோனா பாதிப்பு எச்சரிக்கை நிலை 2க்கு லண்டன், எசெக்ஸ் மற்றும் யார்க் உள்ளிட்ட பகுதிகள் வருகிற சனிக்கிழமை முதல் செல்கின்றன என்று சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அடிப்படையில் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. தொற்று பரவல் வேகம், எண்ணிக்கை அடிப்படையில் அதி தீவிரம், தீவிரம், மிதமான அல்லது நடுத்தர பாதிப்பு பகுதிகள் என்று மூன்று நிலையாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதிதீவிரம் மற்றும் தீவிரம் தவிர்த்த அனைத்து பகுதிகளும் மிதமான பகுதிகள் எனப்படும் நிலை 1ன் கீழ் வருகின்றன.

தற்போது லண்டன், எசெக்ஸ், யார்க், சர்ரேயில் எல்ம்பிரிட்ஜ், வடகிழக்கு டெர்பிஷையர், செஸ்டர்ஃபீல்ட், ஈரேவாஷ், டெர்பிஷெயர், கம்பீரியா, ஃபர்னெஸ்ஸில் பாரோ ஆகிய  பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக வருகிற சனிக்கிழமை முதல் இந்த பகுதிகள் 2ம் நிலை எச்சரிக்கை பகுதிக்குச் செல்வதாக மெட் ஹென்காக் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிக்கை ஒன்றை மெட் ஹென்காக் வெளியிட்டார். அதில் இந்த தகவலை அவர் வழங்கியுள்ளார்.

இந்த தீவிர பாதிப்பு பகுதியில் குடும்பத்தினர்களைத் தவிர்த்து வேறு குடும்பத்தினர்களைச் சந்திப்பது தடை செய்யப்படுகிறது. வீட்டுக்குள், வீட்டுக்கு வெளியே சந்திப்பது மட்டுமின்றி ரெஸ்டாரண்ட், பப் உள்ளிட்ட இடங்களிலும் சந்திப்புக்குத் தடை விதிக்கப்படுகிறது.

மேலும் ஹென்காக் கூறுகையில் “கிரேட்டர் மான்செஸ்டர் பகுதி நிலை 2ல் இருந்து மிகத் தீவிர கட்டுப்பாடுகள் கொண்ட நிலை 3க்கு செல்வது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இங்கிலாந்து மக்கள் தொகையில் பாதி பேர் தீவிர மற்றும் மிகத் தீவிர கட்டுப்பாடு பகுதிக்குள் வருகின்றனர். இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மிக மோசமானதாக மாறிவிடும்.

இந்த நடவடிக்கைகள் எளிதானவை இல்லை. அதே நேரத்தில் இன்றியமையாதது என்பதை நான் அறிவேன்” என்றார்.

மூன்று நிலை கட்டுப்பாடுகள் கடந்த புதன் கிழமை நடைமுறைக்கு வந்தது. தற்போது மூன்றாம் நிலையான அதி தீவிரப் பிரிவில் லிவர்பூல் நகரம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் கிரேட்டர் மான்செஸ்டர் நகரமும் இணையும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter