அனைவரும் மாஸ்க் அணியும் சூழல் உருவாகும் – லண்டன் சுகாதாரத்துறை நிபுணர்

கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, அனைவரும் மாஸ்க் அணியத் தேவையில்லை. அவை மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தான் அவசியம் என்று உலக சுகாதார மையம் கூறி வந்த நிலையில், இனி அந்த நிலை மாறலாம் என்று பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த சுகாதாரத்துறை நிபுணரான பேராசிரியர் david heymann உலக சுகாதார அமைப்பு, மாஸ்க் குறித்த தனது முடிவு பற்றிய விவாதங்களை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் அலுவலர்கள், மக்கள் அனைவருமே மாஸ்க் அணிவது குறித்து பரிந்துரைப்பது குறித்து முடிவு செய்யலாம் என்று கூறியுள்ள அவர், ஆனால் மக்கள் முழுமையாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும், முறையாக அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் 6 அடி 6 அங்குலம் தூரம் மட்டுமே, அதாவது 2 மீட்டர் தூரம் மட்டுமே பரவும் என கருதப்பட்டது.

ஆனால், பாஸ்டனின் Massachusetts Institute of Technology (MIT) என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ள ஒரு ஆய்வில், கொரோனா நோயாளிகள் தும்மும் போதும், இருமும் போதும் தங்களைச் சுற்றி ஏராளமான நோய்க்கிருமி துகள்களை உருவாக்க முடியும் என்று கண்டறிந்துள்ளார்கள்.

அத்துடன், அவர்கள் தும்மும் போது 27 அடி, அதாவது 8 மீட்டர் தொலைவுக்கு வைரஸை பரப்பி மற்றவர்களுக்கு நோய்த் தொற்று உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.