வெஸ்ட் மிட்லான்ட்ஸ்: கத்திக்குத்தில் ஒருவர் பலி… 15 வயது பள்ளி மாணவி உள்பட 5 பேர் கைது!

(Image: Darren Quinton)

வெஸ்ட் மிட்லான்ட்ஸில் நேற்று (சனிக்கிழமை) நடந்த கொலை வழக்கு தொடர்பாக 15 வயது சிறுமி உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் மிட்லான்ட்ஸ் பிர்மிங்ஹாம் போர்ன்ப்ரோக் பகுதி பிரிஸ்டல் சாலையில் நேற்று மாலை ஒருவர் கத்திக்குத்து காயம் அடைந்தார். இது தொடர்பாக வெஸ்ட் மிட்லான்ஸ் போலீசாருக்கு மாலை 4.55 மணி அளவில் போன் அழைப்பு வந்தது. நெஞ்சுப் பகுதியில் கத்திக்குத்து விழுந்ததால் மிகவும் ஆபத்தான நிலையில் அவர் இருந்தார். உடனடியாக அவரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாலை 6.15 மணி அளவில் அந்த நபர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக 15 வயது பள்ளி மாணவி மற்றும் 28 வயது பெண் என இரண்டு பேர் சம்பவ இடத்தில் போலீசார் கைது செய்தனர். மேலும், நாட்டிங்ஹாமைச் சேர்ந்த 22, 30, 40 வயதுடைய மூன்று ஆண்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை போலீசார் கைது செய்தனர்.

கொலையைத் தொடர்ந்து பிரிஸ்டல் சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். போலீசார் மற்றும் துப்பறியும் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தில் ஆதாரம் தொடர்பாக தீவிர ஆய்வு நடத்தினர்.

கொல்லப்பட்ட நபர் தொடர்பான தகவல் எதையும் போலீசார் வெளியிடவில்லை. மாலை நேரத்தில், மிகவும் பரபரப்பான சாலையில் கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அது பற்றி போலீசிடம் தகவல் தெரிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். கொலை வழக்கில் பள்ளி மாணவி, இளம் பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk