டிசம்பர் 2ம் தேதியுடன் கொரோனா ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்களும் கொரோனா தடுப்பில் மிகவும் முக்கியமானவையாக இருக்கும் என்று அறிவியல் ஆலோசகர் சூசன் மிச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிக அளவில் நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை 33,470 ஆக இருந்த கொரோனா பரவல், வெள்ளிக்கிழமை 27,301 ஆக பதிவானது. வெள்ளிக்கிழமை 376 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே நேரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, கொரோனா பரவல் ஆர் விகிதம் 1 முதல் 1.2 என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் அறிவித்துள்ளது.
தற்போது அதிக அளவில் பரிசோதனை செய்வதும் ஊரடங்குக்கு முந்தைய நாட்களில் அதிக அளவில் சமூக கலப்பு நிகழ்ந்ததும் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்திதை அன்பானவர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாட அடுத்த இரண்டு வாரங்கள் மிக முக்கியமானது.
பொது மக்கள் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுவதை நிறுத்த வேண்டும் என்று அரசின் அவசர நிலைக்கான ஆலோசனைக் குழுவின் அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் சூசன் மிச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “கொரோனா தடுப்பூசி பற்றிய முன்னேற்றம் தற்போதைய சூழலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. ஆனால் ஒரு நிம்மதியான உணர்வு உருவாக வழிவகுக்கும்.
ஊரடங்கில் இருந்து விடுபட, ஊரடங்கு நீட்டிப்புக்கான வாய்ப்பை குறைக்க மக்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். விதிமுறையை மீறுவதற்கான தூண்டுதலை எதிர்க்க வேண்டும்” என்றார்.
கொரோனா ஆர் விகிதம் 1 முதல் 1.2 என்ற அளவில் குறைந்திருப்பது பற்றி யூனிவர்சிட்டி காலேஜ் லண்டன் தொற்றுநோயியல் துறை பேராசிரியர் டேம் அன்னா ஜான்சன் கூறுகையில், “இங்கிலாந்தில் அமலில் இருந்த மூன்று அடுக்கு கட்டுப்பாடு காரணமாக கொரோனா ஆர் விகிதம் 1 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் அது ஒன்றுக்கு கீழ் இருக்குமா என்பது பற்றிய தெளிவான தகவல் இல்லை” என்றார்.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…