வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி

Coronavirus vaccine, Oxford, shows. கொரோனா, தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி மாதிரி புகைப்படம்! (Image: moneycontrol.com)

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மிகப் பெரிய அளவில் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலகம் முழுக்க உள்ள நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் தயாரித்துள்ள தடுப்பூசி நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

ஃபைசர் – பயோஎன்டெக், ஸ்பூட்னிக் மற்றும் மாடர்னா என பல நிறுவனங்களின் தயாரிப்புகள் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் தடுப்பூசியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர உள்ளதாக ஃபைசர் – பயோஎன்டெக் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி தொடர்பான ஆய்வு முடிவுகள் லாசென்ட் இதழில் வெளியாகி உள்ளது.

ஆகஸ்போர்டின் ChAdOx1 தடுப்பூசியை 560 ஆரோக்கியமான நபர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. குறிப்பாக 45 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பு முதியவர்கள் மத்தியில் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் முதல் கட்டமாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் இவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரித்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படும் வயதினர் மத்தியில் பாதிப்பின் தாக்கத்தை மிகப்பெரிய அளவில் குறைக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தற்போது தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. வரும் வாரங்களில் தடுப்பூசியின் ஆரம்பக்கட்ட செயல் திறன் அளவீடுகள் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு தடுப்பூசி ஒழுங்கமைப்பின் ஒப்புதல் பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு இது கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

இந்த தடுப்பூசியை உலகம் முழுவதும் எளிதில் கொண்டு செல்லக் கூடியதாக இருப்பது இதன் சிறப்பம்சம் எனப்படுகிறது. இதற்கு மிகவும் குளிரான தட்பவெப்ப நிலை தேவையில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனத்திடமிருந்து 4 கோடி தடுப்பூசியும், மாடர்னா நிறுவனத்திடமிருந்து 50 லட்சம் தடுப்பூசியையும் வாங்க இங்கிலாந்து ஒப்பந்தம் செய்துள்ளது.

அதே நேரத்தில் அஸ்ட்ராஜெனெகாவால் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் தடுப்பூசியை 10 கோடி யூனிட் வாங்க இங்கிலாந்து அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter