நாடு முழுக்க முழு ஊரடங்கு கொண்டு வருவதில் கொஞ்சமும் நியாயம் இல்லை என்று நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் வருகிற வியாழக்கிழமை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அத்தியாவசிய தேவையைத் தவிர்த்து மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. புதன்கிழமை அதற்கு ஒப்புதல் கிடைத்ததும், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துவிடும்.
இந்த நிலையில் முழு ஊரடங்குக்கு வடக்கு நார்ஃபோக் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முழு ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வடக்கு நார்ஃபோக்கில் கடந்த வாரம் முழுவதும் மொத்தம் 37 பேருக்குத்தான் கொரோனா உறுதியாகி உள்ளது. இங்கிலாந்திலேயே மிகக் குறைவான எண்ணிக்கை இங்குதான் உள்ளது.
அப்படி இருக்கும்போது இங்கும் முழு ஊரடங்கு கொண்டு வரப்படுவதால் வணிகர்கள், பொது மக்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே போல் முதியவர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். முதல் ஊரடங்கின் போது உறவினர்கள், பேரக் குழந்தைகளைப் பார்க்க முடியாமல் கஷ்டப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மீண்டும் அது போன்ற நிலை வந்திருப்பது சோகத்தைத் தருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, டிசம்பர் 2ம் தேதி வரை ஊரடங்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் கூட ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான டெகரேஷன் பொருட்களை வாங்குவது, பரிசுகளை வாங்குவது என்று மக்கள் இப்போது கடைகளில் கூடி வருகின்றனர்.
தெற்கு லண்டனில் உள்ள கிங்ஸ்டன் டவுன், போல்டனில் உள்ள பொம்மை கடைகளில் ஏராளமானவர்கள் குவிந்திருந்தனர். அதே போல் பர்மிங்ஹாம், லண்டன், வாட்ஃபோர்டு, மான்செஸ்டர் என அனைத்து இடங்களிலும் பரிசு பொருட்கள் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பலரும் டாய்லெட் பேப்பர்களை அள்ளிச் சென்றதைக் காண முடிந்தது. ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பது பாதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் கூட மக்கள் பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்தவில்லை.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…