கொரோனா நோயாளிகளை கண்காணிக்க போலீசுக்கு சிறப்பு அதிகாரம்!

(Image: AP/PTI)

லண்டன், அக்டோபர் 18, 2020: இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க போலீசாருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா நோய்த் தொற்று உறுதியாகி சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட அறிவுறுத்தப்பட்ட பலரும் பொது வெளிகளில் நடமாடி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கைவிடுத்து வருகிறது.

இங்கிலாந்து அரசு மேற்கொண்ட ஆய்வில் கொரோனா பாசிடிவ் உறுதியாகி, சுய தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் 11 சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே 14 நாட்கள் சுய தனிமையை கடைபிடித்ததாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நேஷனல் ஹெல்த் சர்வீசஸ் பரிசோதனையில் பாசிடிவ் என்று வந்தவர்களின் தகவலை போலீசாருடன் பகிர்ந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனி நபர் பற்றிய விவரங்களும் போலீசாருக்கு தெரிவிக்கப்படும்.

ஒருவர் சுய தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டால் அவர் பற்றிய தகவல் போலீசாருக்கு வழங்கப்படும் என்று சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு (DHSC) துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத் துறைக்கும் காவல் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுய தனிமைப்படுத்தலின் கீழ் வீடுகளில் இருக்கும் அவர்கள் வீட்டிலேயே இருக்கிறார்களா, வெளியே செல்கிறார்களா என்பதை கண்காணிக்க இந்த புதிய திட்டம் உதவும்.

தற்போது கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றுகிறார்கள் என்று தகவல் அறிந்தால் அதை உறுதி செய்ய போலீசார் உள்ளூர் நகர சபை மற்றும் என்.எச்.எஸ் உறுதி செய்யும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பலரும் சர்வசாதாரணமாக நடமாடுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

அதே நேரத்தில் போலீசாருக்கு இந்த தகவல் அளிப்பதன் மூலம் நோயாளிகளின் ரகசியம் காக்கப்படுவது பாதிக்கப்படும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

இது அதிக அளவில் மக்கள் கொரோனா பரிசோதனை செய்வதில் தயக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் ஒயிட்டியின் அலுவலகம் அச்சம் தெரிவித்துள்ளது.

சுய தனிமைப்படுத்தலை நோயாளி மீறியதாக போலீசார் கண்டறிந்தால் நோயாளிக்கு 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.

தொடர்ந்து சட்டத்தை மீறினால் 10 ஆயிரம் பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter