மத்திய ஸ்காட்லாந்தில் பப், ரெஸ்டாரண்ட் மூடல்! – கொரோனா பரவலைத் தொடர்ந்து அதிரடி

scotland , PUB, பப், கொரோனா
(Image: theguardian.com / Jonathan Brady)

எடின்பர்க், அக்டோபர் 7, 2020: மத்திய ஸ்காட்லாந்தில் பப், ரெஸ்டாரண்ட் உள்ளிட்டவை தற்காலிகமாக மூட ஸ்காட்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் கொரோனாத் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு கொண்டு வர வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

ஆனால், மீண்டும் முழு ஊரடங்கு கொண்டு வர முதல்வர் நிக்கோலா மறுத்துவிட்டதாக செய்தி வெளியானது. அதே நேரத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஸ்காட்லாந்தில் கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் படி, மத்திய ஸ்காட்லாந்தில், அதாவது கிளாஸ்கோ, எடின்பர்க் உள்ளிட்ட பகுதிகள் சேர்த்த இடங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கிரேட்டர் கிளாஸ்கோ, க்ளைட், லானர்ஷையர், போர்த் வேலி, லோதியன் மற்றும் அயர்ஷயர், அரான் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 3.4 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற வெள்ளிக்கிழமை (9 அக்டோபர்) மாலை 6 மணி முதல் அக்டோபர் 25ம் தேதி வரை அங்கு பப், ரெஸ்டாரண்ட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆல்கஹால் விற்பனை உரிமம் இல்லாத கஃபேக்கள் மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மக்கள் பயணங்கள் மேற்கொள்வதற்குத் தடை இல்லை.

அக்டோபர் 10ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு ஸ்னூக்கர், உட்புற விளையாட்டு அரங்குகள், கேசினோக்கள், பிங்கோ அரங்குகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்முறை விளையாட்டுக்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தொடர்பு விளையாட்டுக்கள் இரண்டு வாரங்களுக்குத் தடை செய்யப்படுகிறது.

ஸ்காட்லாந்தின் மற்ற பகுதிகளில் பப் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டாலும் கூட, மது வகைகளை வெளியே சென்று அருந்தும் வகையில் விற்பனை செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 1000ம் கொரோனா நோயாளிகள் ஸ்காட்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளனர். இதுதான் இதுவரை ஸ்காட்லாந்தில் பதிவானதில் உச்சமாகும். தற்போது அதிகமாகப் பரிசோதனைகள் செய்யப்படுவதால் அதிக நோயாளிகள் கண்டறியப்படுகிறார் என்று ஆயிரம் விளக்கம் அளித்தாலும் கூட, தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதை மறுக்க முடியாது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter