இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு? – மூத்த விஞ்ஞானிகள் தகவல்

Jonathan Van Tam
துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜோனதன் வான் டாம் (Image: PA)

லண்டன், அக்டோபர் 11, 2020: இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டை மீறி செல்வதால் மீண்டும் முழு ஊரடங்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் நாளுக்கு நாள் தொற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், நாளை திங்கட்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்க உள்ளார் என்று செய்தி வெளியானது.

மூன்று விதமான கட்டுப்பாடுகளை அவர் கொண்டு வர உள்ளார். தொற்று எண்ணிக்கை அடிப்படையில் மூன்று வித கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளது என்று செய்தி வெளியானது.

ஆனால், மூன்று வித கட்டுப்பாடு என்ற நிலையை நாடு தாண்டிவிட்டது என்று விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மீண்டும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என்று அவர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் முன்னணி விஞ்ஞானியான பீட்டர் ஹார்பி மற்றும் இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோர் “இங்கிலாந்து ஆபத்தான கட்டத்தில் உள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜோனத்தன் வான் டாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் மாதத்தில் நம் நாடு எந்த நிலையிலிருந்ததோ, அதே போன்ற நிலையில் தற்போது உள்ளோம்.

கடந்த சில நாட்களாக இளைஞர்களிடையே நோய்த் தொற்று மீண்டும் தொடங்கியுள்ளது. இவர்கள் மூலமாக படிப்படியாக முதியவர்களுக்கு பரவுவதற்கான தெளிவான் சான்றுகள் உள்ளன.

துரதிஷ்டவசமாக பகலைத் தொடர்ந்து இரவு வருவதைப் போலவே, இன்னும் சில வாரங்களில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும்.

முதல் முறை ஏற்பட்ட கொரோனா பரவலைக் காட்டிலும் தற்போது இங்கிலாந்து வேறுபட்ட சூழலில் உள்ளது. இங்கிலாந்து தற்போது குளிர்ந்த, இருண்ட குளிர் மாதங்களுக்கு செல்கிறது.

இங்கிலாந்தின் மேம்பட்ட பரிசோதனைகள், சிறந்த சிகிச்சைகள் தற்போதைய சூழலைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.

பொது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் மூலமும், மற்றவர்களுடனான தொடர்பைக் குறைப்பதன் மூலமும் வைரஸ் பரவலைத் தடுக்க முடியும்.

ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளும்போது அவர்கள் மூலமாக வைரஸ் வளர்ந்து கொண்டிருப்பது துரதிஷ்டவசமான அறிவியல் உண்மை” என்று கூறியுள்ளார்.

மருத்துவர்கள், விஞ்ஞானிகள் அறிவிப்புகள் எல்லாம் இங்கிலாந்து முழு ஊரடங்கை நோக்கி சென்றுவிட்டது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

நாளை பிரதமர் போரிஸ் ஜான்சன் முழு ஊரடங்கை அறிவிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter