லண்டனில் 14 வயதான பள்ளி மாணவி ஒருவர் 24 வயதான இளைஞர் ஒருவரைக் கொலை செய்தது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு சசெக்ஸின் த்ரீ பிரிட்ஜஸ் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த கொலை தொடர்பாக தெற்கு லண்டனில் 14 வயதான பள்ளி மாணவி ஒருவர் நேற்று இரவு 10.20 மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு சசெக்ஸின் ரஸ்ஸல் வேவுக்கு அருகே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒன்பது மணி அளவில் சாலையில் ஒரு இளைஞர் கத்திக் குத்து காயங்களுடன் விழுந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அங்கு விரைந்தனர். 24 வயது மதிக்கத் தக்க இளைஞர் சாலையில் கிடந்தார்.
அவரது உயிரைக் காப்பாற்றத் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஹெலிகாப்டர் ஆம்புலன்சும் அங்குக் கொண்டுவரப்பட்டது.
ஆனாலும், தீவிர கத்திக்குத்து காயம் அடைந்த அந்த நபர், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவக் குழு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கொலை தொடர்பான ஆய்வை போலீசார் தொடங்கினர்.
இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தெற்கு லண்டன் கிராலியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியதாக 21 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபருக்கும் 14 வயது மாணவிக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் போலத் தெரிகிறது என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொலை தொடர்பாக ஆதாரங்களை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பான தகவல் அறிந்தால் அது பற்றி போலீசிடம் தெரிவிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதை படிச்சீங்களா: 4ம் நிலை கட்டுப்பாடு என்று வந்தாலும் ஆதரிக்க தயார்… லிவர்பூல் மேயர் அறிவிப்பு!
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…