இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில், கடந்த ஜூன் மாதம், மெலானியா கேமொனட், 28 மற்றும் அவரது ஓரினச் சேர்க்கை தோழி கிரிஷ் ஆகிய இருவரும் பயணம் செய்தனர். அப்போது பஸ்சில், நான்கு வாலிபர்கள் இருந்தனர். வேறு பயணிகள் இல்லை.பெண்கள் இருவரும், பஸ்சின் மையப்பகுதியில் இருந்தனர். வாலிபர்கள் கடைசியில் இருந்தனர்.
நெருக்கமாக அமர்ந்திருந்த, ஓரினச் சேர்க்கை ஜோடி, ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொண்டனர். அப்போது, பஸ்சில் இருந்த வாலிபர்கள், தங்களுக்கும் முத்தம் தருமாறு, இரு பெண்களையும் கட்டாயப்படுத்தினர். பிறகு, அவர்கள் இருவரையும் மீண்டும் முத்தமிட கூறினர். இதற்கு மறுத்ததால், ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், பெண்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். பதிலுக்கு, வாலிபர்களை தாக்க, அந்த பெண்களும் முயற்சித்தனர்.
ஆனால், இரு பெண்களையும் சரமாரியாக உதைத்த வாலிபர்கள், அவர்களிடம் இருந்து பொருட்களையும் பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து, லண்டன் மாநகர போலீசில், மெலானியா புகார் செய்தார். உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய, நான்கு வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, செல்போன், பெண்களின் கைப்பை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், மூன்று பேர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் மூன்று பேருக்குமான தண்டனை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இரு பெண்களையும் தாக்கியதோடு பொருட்களையும் திருடிய 15 வயது சிறுவன், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சமூக சேவை செய்யவும், பன்முகத்தன்மை தொடர்பான பாடத்தை பயிலவும் உத்தரவிடப்பட்டது.
அதேபோல், 17 வயது சிறுவனும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சமூக சேவை செய்யவும், 16 வயது சிறுவன் அதே பாணியில் எட்டு மாதங்கள் செய்யவும் உத்தரவிடப்பட்டது.