கொரோனா – இங்கிலாந்தில் நர்சுகளாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் பலி

corona tamil news, corona in uk, பிரிட்டன் தமிழ் செய்திகள்

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் நர்சுகளாக பணியாற்றி வந்தவர்கள், கேட்டி டேவிஸ்(வயது 37), எம்மா டேவிஸ். இரட்டையர்களான இவர்கள் இருவரும் அச்சு அசலாக ஒரே முகச்சாயல் கொண்டவர்கள்.

கல்லூரி படிப்பின்போதும் ஒன்றாக நர்சிங் பாடத்தை எடுத்து படித்தனர். படித்து முடித்ததும் இருவருக்கும் ஒரே மருத்துவமனையில் வேலையும் கிடைத்தது.

கொரோனா பாதிப்பு நபர்களை கண்டறிய மோப்ப நாய்களுக்கு பயிற்சி – இங்கிலாந்து புதிய முயற்சி

இந்த நிலையில்தான் அண்மையில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவிற்கு இருவரும் மாற்றப்பட்டனர். புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த கேட்டி, எம்மா இருவருமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி கொண்டனர்.

இருவருக்கும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி கேட்டி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். எம்மா டேவிஸ் நேற்று முன்தினம் பரிதாபமாக மரணமடைந்தார். இரட்டை சகோதரிகளான இந்த நர்சுகளின் மரணம் இங்கிலாந்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி இவர்களது மற்றொரு சகோதரி ஜோயி டேவிஸ் கண்ணீர் மல்க கூறுகையில், “இருவரும் இந்த உலகிற்கு ஒன்றாகவே வந்தனர். இப்போது ஒன்றாகவே உலகைவிட்டு போய்விட்டனர். பிறப்பும், இறப்பும் அவர்களை பிரிக்கவில்லை” என்றார்.

தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து நாட்டில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 377 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 319 ஆக அதிகரித்துள்ளது.