தெற்கு யார்க்ஷயரில் பியூட்டி பார்லர் நடத்துவது போல ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வந்த சகோதரிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தெற்கு யார்க்ஷயரில் ஷாஜியா (43), அபியா தின் (45) என சகோதரிகள் இருவரும் இணைந்து பியூட்டி பூத் என்ற அழகுக்கலை நிலையத்தை நடத்தி வந்துள்ளனர். அங்கு சட்டவிரோத செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பீட்டர் (58), அவரது மகள் நட்டாலி ஆகியோர் உதவியோடு இந்த சட்டவிரோத செயலில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அவர்களின் பியூட்டி பார்லரில் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது அவர்கள் இடத்தில் இருந்து ஹெராயின் மற்றும் கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் அதிக அளவில் சிக்கியது. விசாரணையில் அவர்கள் போதை மருந்துகளைப் பல காலமாக விற்று வந்தது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து மூன்று மில்லியன் டாலர் மதிப்பிலான ஏ மற்றும் பி கிரேடு போதை மருந்துகள், 3 லட்சம் பவுண்ட் ரொக்கம், ஒர் துப்பாக்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.
இதைப் படிச்சீங்களா: இங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் குறைந்தது!
இவர்களிடம் போதை மருந்தை வாங்கி பயன்படுத்தி அதற்கு அடிமையாகி, புதிதாக போதை மருந்து வாங்கப் பணம் இல்லாது அவதியுற்றவர்களைப் போதை மருந்து கடத்தவும், பணம் பரிமாற்றம் செய்யவும் இவர்கள் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
தெற்கு யார்க்க்ஷையர் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதிகளில் இவர்கள் போதை மருந்து கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஷாஜியா தின், அபியா தின், பீட்டர், நட்டாலி உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் அபியா தின்-க்கு 18 ஆண்டுகளும், ஷாஜியா தின்னுக்கு 15 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேருக்கும் சேர்த்து மொத்தமாக 139.6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…