பிரிட்டனின் கொரோனா பரவல் ஆர் நம்பர் மீண்டும் ஒன்றுக்கு மேல் சென்றிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் முழு ஊரடங்கு முடிந்த பிறகு கொரோனா பரவல் குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் நாடு முழுக்க கொரோனா பரவல் வேகம் எடுத்திருப்பது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனைத் தொடர்ந்து பல பகுதிகள் கொரோனா உச்சக்கட்ட கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தளர்வு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் ஒன்றுக்குக் கீழ் சென்ற கொரோனா பரவல் ஆர் நம்பர் தற்போது மீண்டும் பழையபடி ஒன்றுக்கு மேல் சென்றுள்ளது. தற்போது அது 1.1 முதல் 1.2 என்ற அளவில் உள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்த ஆர் நம்பர் அதிகரிப்பது மற்றும் குறைவதை அடிப்படையாக வைத்தே கொரோனா பரவல் அதிகரித்துள்ளதா அல்லது குறைகிறதா என்பதை நிபுணர்கள் கணிப்பார்கள். ஆர் நம்பர் தற்போது அதிகரித்துள்ளது என்றால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என்று அர்த்தம்.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் யுனைட்டட் கிங்டம் கொரோனாத் தொற்று எண்ணிக்கை 6.6 லட்சமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக லண்டன், தென் கிழக்கு, கிழக்கு மிட்லான்ட்ஸ் பகுதியில் அதிகத் தொற்று உறுதியாகி வருகிறது.
தோராயமாக இங்கிலாந்து மக்களில் 95ல் ஒருவர் கொரோனா நோயாளியாக உள்ளார். கடந்த வாரத்தில் இது 115ல் ஒருவர் என்ற நிலையில் இருந்தது.
வடக்கு அயர்லாந்தில் 215ல் ஒருவர் கொரோனா நோயாளி என்ற நிலை உள்ளதாக தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் அது 235 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வடக்கு அயர்லாந்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து வரவே அங்கு ஆறு வாரங்கள் முழு ஊரடங்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் முடிந்த அடுத்த நாள் தொடங்கி ஆறு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன், தென் கிழக்குப் பகுதியில் தொற்று அதிகரித்தாலும், அதே நேரத்தில் வட மேற்கு மற்றும் யார்க்க்ஷையர் பகுதியில் தொற்று நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…