லண்டன், அக்டோபர் 20, 2020: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கணிக்கப்பட்ட வேலை இழப்புகளைக் காட்டிலும் அதிக அளவில் பலரும் வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என்று பேங்க் ஆஃப் இங்கிலாந்து கொள்கை வகுப்பு குழு உறுப்பினர் எச்சரித்துள்ளனர்.
பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினராக கெர்ட்ஜன் வ்லீக் இங்கிலாந்து எதிர்கொள்ள இருக்கும் வேலை இழப்பு மற்றும் பாதிப்பு பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் தற்போது கணிக்கப்பட்டதைக் காட்டிலும் 7.5 சதவிகிதம் அளவுக்கு வேலை இழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், “தற்போது 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேலை இழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதைய சூழல்கள் வேலை இழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே தெரிகின்றன.
வேலையின்மை விகிதம் தற்போது மிதமாக உயர்ந்துள்ள போதிலும், தொற்று நோய் காலத்தில் ஏற்படக் கூடிய வேலை இழப்பைத் துல்லியமாக மதிப்பிடுவது சவாலான விஷயம் ஆகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்ட போது தனியார் துறையில் 30 சதவிகிதம் பணியாளர்கள் ஃபோர்லாக் சலுகையைப் பெற்றனர். அப்போது இருந்ததில் மூன்றில் இரண்டு பங்கினர் வேலைக்குத் திரும்பிவிட்டனர். இருப்பினும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2008-09ல் உலக அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்ட போது 3.3 சதவிகிதம் பேர் வேலையை இழந்தனர். 1990களின் மந்தநிலை நேரத்தில் 3.8 சதவிகிதமாகவும், 1980களின் மந்த நிலையில் 6.6 சதவிகிதமாகவும் அது இருந்தது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களில் 4.5 சதவிகிதம் அளவுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் பேங்க் ஆஃப் இங்கிலாந்து வேலையின்மை விகிதம் 7.5 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என்று கணித்திருந்தது. சர்வ தேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அடிப்படையில் இங்கிலாந்தில் வேலை இழப்பு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால் இந்த கணக்கீடுகள் எல்லாம் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டதாக தற்போது தெரிகிறது. தற்போதைய நிலையில் பொருளாதாரம் மேம்பட இன்னும் அதிக ஊக்கத் திட்டங்கள் வேண்டும்” என்றார்.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…