‘துப்பறிவாளன் 2’ படத்தின் லண்டன் படப்பிடிப்பு நிறைவு

vishals thupparivaalan 2 london shoot completed
vishals thupparivaalan 2 london shoot completed

விஷால் நடித்து வரும் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் லண்டன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படம், ஓரளவுக்கு விமர்சன ரீதியாக வரவேற்புப் பெற்றது. வசூல் அந்த அளவுக்கு இல்லை. எனினும், ரசிகர்களுக்கு அந்த படத்தின் ட்ரீட்மென்ட் பிடித்திருந்தது.

சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விஷாலின் ‘ஆக்‌ஷன்’ படமும் சரியாக ஓடவில்லை. இதனால், ஒரு கம்பேக் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விஷால்.

‘ஆக்‌ஷன்’ வெளியாகும் முன்பே, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் அறிவித்தார்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டது. விஷால் தயாரித்து வரும் இந்தப் படத்தில் புதுமுகம் அஷ்யா நாயகியாக நடித்து வருகிறார். மேலும், பிரசன்னா, கெளதமி, ரகுமான், ரமணா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘துப்பறிவாளன் 2’ படத்தின் முக்கியக் காட்சிகள் அனைத்தும் சுமார் 40 நாட்களாக லண்டனில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இதனை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கவுள்ளது படக்குழு. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ள படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஷால்.