கரோனா பாதிப்பு – மருத்துவராக களமிறங்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த ‘மிஸ் இங்கிலாந்து‘!

கரோனா வைரஸால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவராக களமிறங்கியுள்ளார் 2019ம் ஆண்டுக்கான மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பாஷா முகர்ஜி.

இந்தியாவில் பிறந்த பாஷா முகர்ஜிக்கு 9 வயதாக இருக்கும்போதே அவரது குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. அழகிப்போட்டியில் பங்கேற்கவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தார். படிப்பிலும் ஆர்வம் காட்டிய இவர், மருத்துவப் படிப்பில் பட்டத்தையும் பெற்றார்.

கடந்த 2019ம் ஆண்டு மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்ற பின்னர் பில்கிரிம் மருத்துவமனையில் ஜூனியர் மருத்துவராக பணியாற்றத்தொடங்கினார். பின்னர் சில காரணங்களுக்காக மருத்துவராக அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. எனினும் பல தொண்டு நிறுவனங்களுக்கு தூதுவராக இருந்து பல்வேறு நாடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தத்தொடங்கினார்.

தற்போது கரோனா வைரஸின் பாதிப்பு உலக அளவில் கொடூரமாக இருப்பதாலும் அவர் பணிபுரிந்த மருத்துவமனையில் இருந்து நண்பர்கள் அவருக்கு அழைத்து நிலமை மோசமாக இருக்கிறது என்று கூறியதாலும் இங்கிலாந்தில் அவர் ஏற்கனவே பணி புரிந்த மருத்துவமனையிலேயே மருத்துவராக பணியாற்ற முடிவு செய்துள்ளார்.

அதனை அடுத்து, அதற்காக தன்னை தயார் படுத்தியுள்ளார். சுமார் 2 வாரங்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு தன் உடல்நிலை சரியாக இருப்பதையும் தெளிவுபடுத்திக்கொண்டுள்ளார். “இங்கிலாந்து தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த மோசமான காலத்தில் இங்கிலாந்துக்கு உதவ நான் முன்வராவிட்டால் மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்றதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்” என்று கூறுகிறார் பாஷா முகர்ஜி.