இங்கிலாந்து மக்கள் ஸ்காட்லாந்துக்குள் நுழையத் தடை?

Nicola Sturgeon, Aberdeen
ஸ்டாட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்.

இங்கிலாந்தின் கொரோனா ஹாட் ஸ்பாட்களை சேர்ந்தவர்கள் ஸ்காட்லாந்துக்கு வர வேண்டாம் என்று முதல்வர் நிக்கோலா ஸ்டார்ஜன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலரின் பொறுப்பற்ற செயலால் தற்போது இங்கிலாந்தில் கொரோனா 2ம் கட்ட பரவல் வந்துவிட்டது. முழு ஊரடங்கைத் தவிர்க்க அரசு போராடி வருகிறது.

ஆனால், இப்போது கூட அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து மக்கள் சாலைகளில் கூடுவது வேதனை அளிக்கிறது.

கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வர அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஸ்காட்லாந்துக்கு வர வேண்டாம் என்று முதல்வர் நிக்கோலா ஸ்டர்ஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே போல ஸ்காட்லாந்து மக்களும் இங்கிலாந்தின் ஹாட் ஸ்பாட் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஸ்காட்லாந்துக்கு வருவதைத் தடுப்பது தொடர்பாக விரைவில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் நிக்கோலா தெரிவித்துள்ளார்.

அதிக ஆபத்து உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் யு.கே-வின் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் பகுதிக்கு வருவதை இங்கிலாந்து அரசு தடுக்க வேண்டும் என்று வேல்ஸ் முதல்வர் மார்க் டிரேக்ஃபோர்ட் வலியுறுத்தியுள்ளார். இதைத் தானும் வரவேற்பதாக நிக்கோலா தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வருகிற 26ம் தேதி முடிவடைகின்றன. இந்த நிலையில் அங்கு இங்கிலாந்தில் உள்ளதைப் போன்று மூன்று நிலை கட்டுப்பாடு பகுதிகளுக்குப் பதில் நான்கு நிலை கட்டுப்பாடுகளைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நான்காவது நிலை என்பது மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. “போக்குவரத்து உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள்  குறித்து ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு பிறகு கொண்டு வரப்படும்” என்று நிக்கோலா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் வைட்டி ஏற்கனவே இங்கிலாந்து அரசு கொண்டு வந்துள்ள மூன்று நிலை கட்டுப்பாடுகள் வைரஸ் பரவலைத் தடுக்க போதுமானதாக இருக்காது என்று கூறியுள்ளார். நிக்கோலாவும் இதை இன்று தன்னுடைய உரையின் போது சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter