லண்டன், அக்டோபர் 9, 2020: கொரோனா காரணமாக தொழில் நிறுவனங்கள் மூட வேண்டிய சூழல் உருவானால் ஊழியர்களுக்கு 67 சதவிகிதம் அளவுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று சான்ஸ்லர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா மிக மோசமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கண்டறியப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. உயிரிழப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கொரோனா பரவல் வேகத்தைத் தடுக்க உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பப், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட சேவைத் துறையினர் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இரண்டாம் அலை காரணமாக இங்கிலாந்தில் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதித்துறை வேந்தர் ரிஷி சுனக் இன்று புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதன் படி, கொரோனா பாதிப்பு காரணமாக நிறுவனங்கள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என்று அரசு அறிவித்தால், ஊழியர்களுக்கான சம்பளத்தில் மூன்றில் ஒன்றை அரசு வழங்கும்.
இந்த திட்டம் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்கும். ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும்” என்றார்.
இந்த திட்டத்தின் மூலம் இங்கிலாந்து அரசுக்கு மாதம் பல கோடிக் கணக்கான பவுண்ட்கள் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து முழுக்க தொற்று அதிகரித்து வரும் நிலையில் உள்ளூர் அளவில் பார், பப் திறக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதை நாடு முழுக்க ஒரே சீராக அறிவிக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
பெருந்தொற்று காரணமாக மக்கள் வேலை இழப்பதைத் தடுக்க அரசு ஒருவருக்கு அதிகபட்சமாக மாதத்துக்கு 2100 பவுண்ட் வரை வழங்கும் என்று கூறப்படுகிறது.
இது தவிர தொழில் நிறுவனங்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை 3000 பவுண்ட் வரை மானியம் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
நவம்பர் மாதம் வரை தொழில் நிறுவனங்கள் மூட கட்டாயப்படுத்தப்பட்டால் தற்போது நடைமுறையில் இருக்கும் பாதுகாப்பு திட்டங்களையே நிறுவனங்கள் தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்கட்சியின் ஷேடோ சான்ஸ்லர் அன்னலீசி டோட்ஸ் புதிய திட்டமானது அரசாங்கத்தின் யு டேர்ன் என்று விமர்சித்தாலும் வரவேற்றுள்ளார். இந்த திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…