அபெர்டீன், செப்டம்பர் 28, 2020: ஸ்காட்லாந்தில் தடையை மீறி வீடுகளில் நடந்த நூற்றுக் கணக்கான பார்ட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. ஆனால், அதற்கு மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லை என்பதை பல்வேறு சம்பவங்களும் எடுத்துக் காட்டி வருகின்றன.
கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமை இரவுகளில் ஸ்காட்லாந்தின் பல பகுதிகளில் தடையை மீறி நடந்த நூற்றுக் கணக்கான ஹவுஸ் பார்டிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
தோராயமாக ஸ்காட்லாந்து முழுவதும் 300க்கும் மேற்பட்ட ஹவுஸ் பார்ட்டிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படி தடுத்து நிறுத்தப்பட்ட ஹவுஸ் பார்ட்டிகளில் 10ல் ஒன்று இளைஞர்கள் ஏற்பாடு செய்தது என்று கூறப்படுகிறது.
இளைஞர்கள் மட்டும்தான் இப்படி பொறுப்பின்றி நடந்து கொள்கிறார்கள் என்று இல்லை, எல்லா வயதினரும் ஹவுஸ் பார்ட்டி நடத்தி சிக்கியதாக ஸ்காட்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
Our Chief @CC_Livingstone thanked the vast majority of the public for co-operating with new restrictions over the weekend but reiterated concern about house parties. Officers responded to at least 300, issuing 101 fixed penalties and making 14 arrests 👇https://t.co/0HguZ1sinK
— Police Scotland (@policescotland) September 28, 2020
இது குறித்து தலைமை கான்ஸ்டபிள் இயன் லிவிங்ஸ்டன் கூறுகையில், “பெரும்பாலான மக்கள் அரசு கொண்டு வந்த விதிகளைப் பின்பற்றுகின்றனர். சிலர் மட்டுமே விதிகளை மீறுகின்றனர். இது போன்ற நேரங்களில் நிலைமையை சமாளிக்க தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது.
தற்போதைய சூழலில் ஒரு வீட்டில் விருந்தை ஏற்பாடு செய்ய, நடத்த, அதில் மற்றவர்கள் கலந்துகொள்ள எந்தவிதமான காரணமும் இருக்க முடியா. இது சட்டத்துக்கு எதிரானது. தொடர்ந்து சட்டத்தை மீறுவோம் என்று இருப்பவர்களை எதிர்கொள்ள காவலர்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது” என்றார்.
கொரோனா பரவல் தீவிரத்தை உணர்ந்து மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…