கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது நிகழும் சமூக ஒன்று கூடலால் ஏற்படும் கொரோனா பரவல் அபாயம் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று என்.ஹெச்.எஸ் ப்ரொவைடர்ஸ் தலைவர் கிரிஸ் ஹாப்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா பரவலைத் தடுக்க மூன்று நிலை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. கிறிஸ்துமஸ் சமயத்தில் டிசம்பர் 23ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் நெருக்கமானவர்களை அவர்கள் இல்லத்துக்கு சென்று சந்திக்கவும் அவர்களுடன் தங்கவும் கூட அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த கட்டுப்பாடு தளர்வு பற்றி நிபுணர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
பிபிசி-க்கு பேட்டி அளித்த என்.ஹெச்.எஸ் ப்ரொவைடர்ஸ் தலைவர் கிரிஸ் ஹாப்சன், “கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுக்க கிரிஞ்ச் திருடிச் சென்றது போன்று நடப்பதை நான் விரும்பவில்லை.
கிறிஸ்துமஸில் அதிக சமூகத் தொடர்புகள் நிகழும் என்பதால் கொரோனா பரவலுக்கு வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்து மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மக்கள் கிறிஸ்துமஸ் தருணத்தில் தாங்கள் விரும்பியதைச் செய்வதற்கு முன்பு மிக மிக கவனத்துடன் யோசித்து பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.
நாம் எந்த அளவுக்கு விதிமுறைகளைப் பின்பற்றுகிறோம் என்று எண்ணிப் பார்ப்பதை விட நாம் சந்திக்கும் நபருக்கு நம்மால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
தேங்க்ஸ் கிவ்விங் நாளுக்குப் பிறகு அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பு அதிகரித்திருப்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதே போன்று ஒரு சூழல் ஜனவரியில் நிகழும் அபாயம் இருப்பதை எண்ணி என்.ஹெச்.எஸ் கவலை கொண்டுள்ளது” என்றார்.
இங்கிலாந்தில் வருகிற 16ம் தேதி கொரோனா மூன்று நிலை கட்டுப்பாடு தொடர்பான மறு ஆய்வு நடைபெற உள்ளது.
கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது இங்கிலாந்தில் மூன்றாம் அலை கொரோனா பரவலுக்கு வழிவகுத்துவிடும் என்று என்.ஹெச்.எஸ் உள்ளிட்ட சுகாதார அமைப்புகள், நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…