ஐபோன் 11 உள்பட 50 லட்சம் பவுண்ட் ஆப்பிள் தயாரிப்புக்கள் திருட்டு!

Apple, products stolen, கொள்ளை, ஆப்பிள்
கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதி (Image: Google Map)

நார்த்தம்ப்டன்ஷையரில் லாரி டிரைவர் மற்றும் பாதுகாவலரைக் கட்டிப் போட்டு லாரியில் இருந்த 50 லட்சம் பவுண்ட் மதிப்புடைய ஐபோன் 11 உள்ளிட்ட ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் வருவதையொட்டி அதிக அளவில் விற்பனையை மனதில் கொண்டு விலை உயர்ந்த பொருட்கள் பல இங்கிலாந்துக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. பல பொருட்கள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவையை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கடந்த நவம்பர் 10ம் தேதி வந்தது.

இந்த லாரியை நார்த்தம்ப்டன்ஷையர் சவுத் பெண்ட் ஸ்லிப் சாலை சந்திப்பு 18-க்கு வந்த போது இரவு 7.45 முதல் 8 மணி அளவில் மர்ம நபர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

லாரியின் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலரைக் கட்டிப் போட்ட அவர்கள் லாரியின் சரக்கு கண்டெய்னரை திருடிச் சென்றனர்.

அதில், ஐபோன் 11, ஏர் பாட்ஸ், ஆப்பிள் வாட்ச் என ஏராளமான ஆப்பிள் தயாரிப்புகள் இருந்தன. இவற்றின் மதிப்பு 50 லட்சம் பவுண்ட்.

திருடப்பட்ட டிரக் லீசெஸ்டர்ஹையரின் லுட்டர்வொர்த் என்ற இடத்தில் கண்டறியப்பட்டது. உள்ளே சரக்குகள் காணவில்லை.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம்.

இதைப் படிச்சீங்களா: பெட்ரோல், டீசல் கார்கள் விற்பனைக்கு 2030ல் தடை?

குறிப்பிட்ட நாளில் அந்த சாலையில் டேஷ் கேமராவுடன் பயணித்த வாகன ஓட்டிகள் தங்களிடம் உள்ள காட்சிகளை எங்களிடம் பகிர கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், யாராவது மிகக் குறைந்த விலைக்குப் புத்தம் புதிய ஆப்பிள் தயாரிப்புகளை விற்பனை செய்வதாக கூறினால், அது பற்றி எங்களுக்குத் தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறோம்” என்றனர்.

கிறிஸ்துமஸ் விற்பனைக்குக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தயாராகி வரும் நிலையில், இந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter