கொரோனா உயிரிழப்பு காரணமாக இங்கிலாந்தில் இயல்பு நிலையைக் காட்டிலும் அதிக அளவில் உயிரிழப்புகள் பதிவாகி வருவதாக தேசிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் கொரோனா ஊரடங்கு டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய படி மூன்று அடுக்கு கட்டுப்பாடு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நாடு முழுவதும் இருந்து வந்து கொண்டிருக்கும் தகவல்கள் கவலை அளிக்கும் வகையிலேயே உள்ளன.
தற்போது இயல்புநிலையைக் காட்டிலும் அதிக அளவில் மரணங்கள் பதிவாகி வருவதாகவும், இதற்குக் காரணம் கோவிட்தான் என்றும் கூறப்படுகிறது.
நவம்பர் 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கிட்டத்தட்ட 14,000 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இறப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது 2838 பேர் கொரோனா வைரஸ் தொற்றல் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இது முந்தைய வாரத்தை விட 600 அதிகம் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக வட மேற்கு இங்கிலாந்து மற்றும் யார்க்ஷயரில் அதிக அளவில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டு பகுதிகளிலும் இயல்பு மரணங்களை விட மூன்றில் ஒரு பங்கு அதிக உயிரிழப்பு பதிவாகி உள்ளது.
இருப்பினும் கொரோனா உயிரிழப்பு வரும் நாட்களில் மிகப்பெரிய அளவில் குறையத் தொடங்கும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நஃபீல்ட் டிரஸ்ட் ஹெல்த் டேங்க் சாரா ஸ்கோபியா கூறுகையில், “இரண்டாம் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கூட அதிகரித்து வரும் உயிரிழப்புகள் இந்த கொரோனா வைரசின் பயங்கரமான தாக்கத்தை நினைவூட்டுகின்றன.
அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வருவதும் உயிரிழப்புகள் ஏற்படுவதும் என்.எச்.எஸ் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது” என்றார்.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…