ஆர் விகிதம் அதிகமாக இருந்தால் டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகும் கூட ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அமைச்சர் மைக்கேல் கோவ் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.
இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு கொண்டுவரப்படாது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி வந்தார். ஆனால், கொரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து வியாழன் முதல் ஊரடங்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்து அது நிறைவேற்றப்பட்டால் வியாழக்கிழமை காலை முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால், இங்கலாந்தில் 2ம் முழு ஊரடங்கு வருவது உறுதியாகிவிட்டது. இதை எதிர்கொள்ள மக்கள் தயாராகி வருகின்றனர்.
டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு இல்லாமல் இருந்தால் போதும் என்று மக்கள் ஏங்கி வருகின்றனர். ஆனால், அதற்கும் வேட்டு வைக்கும் வகையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக டச் ஆஃப் லங்காஸ்டர் வேந்தர் மைக்கேல் கோவ் கூறுகையில், “தற்போதைய சூழல்களைப் பார்க்கும் போது கிறிஸ்துமஸை ஊரடங்கின் கீழ்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஊரடங்கைத் தளர்த்த வேண்டும் என்றால் கொரோனா தொற்று பரவல் விகிதம் (ஆர் வீதம்) 1க்கு கீழ் குறைய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஊரடங்கைத் தளர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்” என்றார்.
அமைச்சரின் இந்த பேச்சு லட்சக் கணக்கான இங்கிலாந்து குடும்பங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அவர் கூறுகையில், “ஊரடங்கைத் தளர்த்துவது பற்றி டிசம்பர் 2ம் தேதி நாங்கள் ஆய்வு செய்தோம். புள்ளிவிவர தரவுகள் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.
இதற்குள்ளாக தொற்று விகிதத்தை மிகப்பெரிய அளவில் குறைப்போம் என்று நம்புகிறோம்” என்றார்.
2வது முழு ஊரடங்கு குறித்து அரசின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் மார்க் வால்போர்ட் கூறுகையில், “இப்போது இல்லை என்றால் அது மிகவும் தாமதமான ஒன்றாக மாறிவிடும்.
ஊரடங்கு நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் வழக்கத்துக்கு மாறாக மிக எளிமையானதாக இருக்கும்” என்றார்.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…