லண்டன்: கொலை செய்துவிட்டு இந்திய தப்பிய கொடூரனுக்கு ஆயுள் சிறை!

குற்றவாளி அமான் வியாஸ் (Image: Met Police)

லண்டனில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய குற்றவாளிக்கு லண்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

லண்டனில் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். 30ம் தேதி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்புடைய நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் தீவிர ஆய்வு நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. கடைசியாக கொலை செய்யப்பட்ட பெண் சென்ற சூப்பர் மார்க்கெட் சிசிடிவி காமரா காட்சியை ஆய்வு செய்த போது அவரை ஒரு நபர் பின் தொடர்ந்தது தெரிந்தது. அவர் யார் என்று விசாரித்த போது சரியான தகவல் கிடைக்கவில்லை. கடைசியில் அந்த நபர் பெயர் அமான் விகாஸ் என்பதும் கொலை நடந்த அடுத்த நாளே அவன் இந்தியாவுக்கு தப்பியதும் தெரியவந்தது.

கொலை செய்தது வியாஸ் அமான்தான் என்று உறுதி செய்வதற்கு போலீசாரிடம் எந்த தடையமும் இல்லை. அதே நேரத்தில் வியாசின் உறவினர் லண்டனில் வேலை செய்து வந்தது தெரிந்தது. ரகசியமாக அவரது உடலில் இருந்து மாதிரியை எடுத்து டி.என்.ஏ பரிசோதனை செய்து பாலியல் வன்முறை, கொலையாளியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட குற்றவாளியின் டி.என்.ஏ-வுடன் ஒத்துப் போகிறதா என்று பார்த்தனர். அதில் வியாஸ்தான் கொலைகாரன் என்பது உறுதியானது.

அதில் இருந்து வியாசை பிடிக்க போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். அவனைப் பற்றி அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 2011ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் இருந்து வேறு ஒரு நாட்டுக்கு செல்ல முயன்ற போது வியாஸ் கைது செய்யப்பட்டான். அவன் மீது லண்டன் போலீசில் வழக்கு இருந்ததால் அவனை விடுக்க இந்திய போலீசார் மறுத்துவிட்டனர். அதே நேரத்தில் இங்கிலாந்து போலீசில் ஒப்படைப்பதில் சட்டச் சிக்கல் இருந்தது.

கடைசியில் 2019ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி இந்தியா சென்ற லண்டன் போலீசார் வியாசை கைது செய்து லண்டன் அழைத்து வந்தனர். அவன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவே கடந்த ஜூலை 30ம் தேதி வியாஸ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டான். இன்று அவனுக்கான தண்டனை குரோய்டன் கிரவுன் நீதிமன்றம் அறிவித்தது. அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் படி கொலைக் குற்றத்துக்காக அவன் 37 ஆண்டுகள் சிறையில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டான். ஏற்கனவே சில காலம் இந்தியா, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததால் 34 ஆண்டுகள் 312 நாள் அவன் சிறையில் அடைக்கப்படுவான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கெட்ட எண்ணத்துடன் பெண்களை அணுகியதற்காக 14 ஆண்டுகள், முதலில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 16 ஆண்டு ஐந்து மாதங்கள், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக தனித்தனியாக 18.6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சிறை தண்டனையை அவன் ஆயுள் தண்டனையோடு சேர்த்து அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk