நோர்ஃபோக், 2 செப்டம்பர் 2020: கடந்த வாரம் நோர்ஃபோக் வனப் பகுதியில் நடந்த சட்டவிரோத இசை நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தியபோது அவர்களை இளைஞர்கள் அடிக்க பாய்ந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இசை நிகழ்ச்சிகள், வீடுகளில் பார்ட்டி உள்ளிட்டவை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சாலையோர இசை நிகழ்ச்சிகள் தொந்தரவாக மாறி வருவதால் சட்டவிரோத இசை நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்ட் வரை அபராதம் விதிக்கும் புதிய விதிமுறை கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்தது.
ஆனாலும் நாடு முழுக்க ஏராளமான சட்டவிரோத இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், இசை நிகழ்ச்சிகாக அமைக்கப்பட்ட இசை கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த வாரம் ஆகஸ்ட் 30ம் தேதி இரவு நோர்ஃபோகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட வனப்பகுதியான தெட்ஃபோர்டு பகுதியில் சட்டவிரோத இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பிட்ட பாதையில் அதிகப்படியான கார்கள் சென்று வருவதைக் கண்ட போலீசார் அங்கு ட்ரோன் மூலம் நடப்பதை முதலில் கண்காணித்தனர்.
அப்போது ஏராளமானோர் கூடி ஆட்டம் போட்டு வந்ததைக் கண்டறிந்தனர். உடனடியாக அங்கு அதிக அளவில் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
இசை நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கிருந்த இசை நிகழ்ச்சி தொடர்பான கருவிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
#Norfolk Police have released helicopter footage of an illegal rave held at #Thetford Forest at the weekend. #HeartNews pic.twitter.com/WoLyMxU4BJ
— Heart News East (@HeartNewsEast) September 2, 2020
இரவு 11.20 மணி அளவில் போலீசார் அங்கு சென்று சட்டவிரோத இசை நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியதால் இளைஞர்களுக்கு கோபம் ஏற்பட்டது.
அதில் ஒருவர் போலீசாரை அடிக்க பாய்ந்தது உள்ளிட்ட வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பாக பேசப்படுகிறது.
ரேவிங் இடியட்ஸ் என்று முன்னணி ஊடகங்கள் இந்த இளைஞர்கள் மற்றும் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
போலீஸ் வருகைக்குப் பிறகு பலரும் கலைந்து செல்ல, ஐந்து பேர் எதிர்த்து நின்று பிரச்னை செய்துள்ளனர். அவர்களுக்கு போலீசார் தலா 100 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…