இங்கிலாந்தில் இரண்டாவது தேசிய அளவிலான ஊரடங்குக்கு தயாராக இல்லை என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் குளிர்காலத்தில் இரண்டாவது கட்டமாக கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தி சண்டே டெலிகிராப் இதழுக்குப் பிரதமர் அளித்த பேட்டியில், “நாடு முழுமைக்குமான ஊரடங்கு என்பது அணு வெடிப்பு பாதிப்பைப் போன்றது. இதற்கு நாடு தயாராக இல்லை. அணுசக்தி பாதிப்பு போன்ற ஊரடங்கு என்ற முடிவைக் கைவிடுவதைத் தவிர வேறு எந்த தடுப்பு நடவடிக்கையையும் கைவிட முடியாது. அதை மீண்டும் பயன்படுத்த நான் விரும்பவில்லை. அதுபோன்ற மோசமான நிலைக்கு நாம் மீண்டும் செல்ல மாட்டோம் என்று நம்புகிறேன்.
தற்போது நம்முடைய மருத்துவக் குழுவினர் நோய்த் தொற்றைக் கண்டறிதலில் வல்லுநர்களாக மாறிவிட்டனார். நோயைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், எந்த குழுவில் பரவல் உள்ளது என்பதை திறமையாக கண்டறிகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் பிரச்னையை மிகவும் நுண்ணிப்பாக கவனிக்கவும், நோய்த்தொற்று பரவலைக் கண்டறியவும், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உள்ளூர் அளவில் என்ன தேவையோ அதை செய்து பரவலைக் கட்டுப்படுத்தவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் கீழ் மக்கள் உடனடி பயணங்களுக்கு பொது போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். வேலை செய்யும் இடம் பாதுகாப்பானது என்று கருதினால் வேலை வழங்குபவர் பணியாளர்களை மீண்டும் பணிக்கு அழைக்க முடியும்.
இருப்பினும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவியல் ஆலோசகா சர் பேட்ரிக் வலன்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். “வருவது குளிர்காலம், சவால்கள் அதிகமாக இருக்கும். நிச்சயமாக தேசிய நடவடிக்கைகள் தேவைப்படும் அளவுக்கு ஆபத்துக்கள் இருக்கிறது” என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது